சவுதி இளவரசர் சல்மான்
வழிகேடுகளின் வாசல் திறக்கும்
சவுதி இளவரசரும்
திசைமாற்றும் அழைப்பாளர்களும்
**************************
கட்டுரை எண் 1575
****************
வழிகேடுகளின் பிறப்பிடமாக திகழ்ந்த அரபுலகத்தை செவ்வைப்படுத்தி
அறியாமையில் ஊறிப்போன மக்களை சீர்படுத்தி
அழகிய கட்டுப்பாடுகளை விதித்து நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுத்து
அரபுலகை இஸ்லாமிய நாடாக உருவாக்கியதில் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் ஒப்பற்ற தியாகமும் நபித்தோழர்களின் தியாகங்களுமே முதன்மையானது
உலகமே அரபுநாடுகளை போன்ற (குர்ஆனிய) அரசியல் சட்டங்களே மனித வாழ்வுக்கு ஏற்றது என்று அவர்களையும் அறியாது ஒப்புக்கொண்டு வரும் இச்சூழலில் பரம்பரை ரீதியாக அரபுலகில் ஆட்சிக்கு வந்த சிலர்களால் அரபுலகத்தின் புனிதத்துவம் சிதிலமடைந்து வருகிறது
அந்த கலக்கத்தை ஏற்படுத்தி வருவதில் முன்னோடியாக விளங்கும் ஒருவர்
தற்போதைய சவுதி மன்னர்
!!இளவரசர் சல்மான் என்பவராகும்!!
எதிர் காலத்தில் பெட்ரோல் தேவை குறுகி
இதர தேவைகள் அதிகரிக்கும் சூழலில்
ஆயில் வருமானத்தை மட்டும் எதிர்பார்த்து இருக்காமல் சவுதியின் பொருளாதாரத்தை முன்னேற்றவே இஸ்லாத்திற்கு எதிரான நிகழ்சிகளை நிர்பந்த நிலையில் அனுமதித்து வருகிறோம் என்பதே சமூகவலைத்தளத்தில் தந்திரமாக பரப்பப்படும் பொய் கலந்த புறக்காரணமாகும்
இக்காரணத்தை வைத்து மார்க்கம் கண்டிக்கும்
தீய செயல்களை நாட்டில் அங்கீகரிக்கலாம் என்றால்
ஒழுக்கக்கேடுகளை தூண்டும் பேஷன் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்கலாம் என்றால்
அதே காரணத்தை வைத்து அதிகப்படியான வருமானத்தை ஈட்டித்தரும் இதர ஹராம்களை ஏன் அனுமதிக்கக் கூடாது ?
அல்லது சில ஹராம்களுக்கு அனுமதி
சில ஹராம்களுக்கு எப்போதும் தடை என்று மார்க்கத்தில் வழிமுறைகள் உள்ளதா ?
இது போன்ற தீங்குகளை கூட கண்டிக்க துணிவற்றவர்கள் கண்டிக்கும் நபர்களையே கண்டித்து அறிக்கை போடுவதும்
அது போன்றவர்களை
இஸ்லாமிய ஆட்சியை கலங்கப்படுத்துபவர்களைப்போல் சித்தரித்து மக்களிடம் வெறுப்பை ஊட்டுவதும் கயமைத்தனத்தின் உச்சம்
இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக அரங்கேற்றப்படும் காரியங்களை அனுமதிக்கும் ஆட்சியாளர்களின் செயல்களை
கண்டிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை
மாறாக அவைகளை காரணமாக முன் வைத்து இணை வைப்புக்கு ஆதரவாக இஸ்லாமிய ஆட்சியாளர் இல்லாத நிலையில் இஸ்லாமிய நாட்டில் புரட்சியை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முனைவதையே இஸ்லாம் தடுக்கிறது
இந்த உண்மைக்கு மாற்றமாக ஆட்சியாளர்
எதை செய்தாலும் கண்டு கொள்ளக்கூடாது என்றும்
அல்லது அது போன்ற தவறுகளை ஆட்சியாளரிடம் தனிப்பட்டு சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் மக்களை மூளைச்சலவை செய்வதாகும் மேலும் இறைநம்பிக்கையாளர்களின் நியாயமான உணர்வை கொச்சைப்படுத்துவதாகும்
இஸ்லாமிய ஆட்சியாளர் செய்யும் தவறுகளை தனிப்பட்டு சுட்டிக்காட்ட வேண்டும் என்று வேதாந்தம் பேசுவோரிடம் நீங்கள் கேளுங்கள்
இஸ்லாமிய ஆட்சியாளர் செய்யும் தவறுகளை தனிப்பட்டு சுட்டிக்காட்ட அது போன்ற ஒரு ஏற்பாடு அரபுலகில் இன்று வரை உள்ளதா ?
அத்தகையவர்களிடம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை பகிரங்கப்படுத்தக்கூடாது என்று போதிக்கும் நீங்கள்
இதுநாள் வரை ஏதாவது ஒரு தீங்கை அதிகாரப்பூர்வமாக அவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளீர்களா ? அதை ஆதாரப்பூர்வமாக நீங்கள் வெளியிடத்தயாரா ? என்று
இஸ்லாமிய உணர்வில்லாத காரணத்தால் அரபுலகை எவரும் எதிர்ப்பது இல்லை
மாறாக இஸ்லாமிய உணர்வு இருப்பதால் மட்டுமே அரபுலகம் செய்யும் தவறுகளை கொந்தளித்து எதிர்க்கின்றனர் என்பதே எதார்த்த உண்மை
எங்களிடம் தூய இஸ்லாம் வந்தடைய காரணமாக இருந்த அரபு நாடுகளே தூய்மையற்று போகலாமா என்ற விரக்தியின் உச்சமே
எதிர்ப்பின் அடிப்படைக்காரணம்
நீங்கள் முடமாக இருப்பதை யாரும் எதிர்க்கவில்லை
மாறாக இஸ்லாமிய உணர்வுடன்
தவறான ஆட்சியாளர்களின் செயலை
இயன்ற வரை எதிர்ப்போரையும் முடமாக்கி விடாதீர்கள் என்பதே இப்பதிவின் நோக்கம்
இந்நிலையில் முஸ்லிம்கள்
இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று
அந்த அறிஞர் இப்படி சொல்லியுள்ளார்
இந்த அறிஞர் இப்படி சொல்லியுள்ளார்
என்று ஹதீஸ்களைப்போல்
பிற அறிஞர்களின் கூற்றுகளை அரபியில்
பரப்புவதை விட
அல்குர்ஆனும் நபிமொழிகளும் என்ன சொல்கிறது ? என்பதையும் அதற்கு ஏற்று நபித்தோழர்கள் எவ்வாறு முன்னுதாரணமாக
நடந்து காட்டினார்கள் என்பதையும் மக்களுக்கு இனிமேலாவது விளக்குங்கள்
அணிந்துள்ள உடையும்
இருக்கும் இருப்பிடமும்
ஒருவரின் மார்க்க ஞானத்தை பறைசாற்றாது
மாறாக எடுத்து வைக்கும் மார்க்க ஆதாரங்களும் அறிவுப்பூர்வமான வாதங்களுமே
ஒருவரின் மார்க்க ஞானத்தை பறைசாற்றும்
****************************
கீழ்காணும் ஹதீசை சுட்டிக்காட்டியே இஸ்லாமிய ஆட்சியாளர்களை எதிர்கக்கூடாது என்று வழமையாக வாதிக்கின்றனர்
مَنْ أَرَادَ أَنْ يَنْصَحَ لِذِي سُلْطَانٍ، فَلَا يُبْدِ لَهُ عَلَانِيَةً،
وَلَكِنْ يَأْخُذُ بِيَدِهِ فَيَخْلُو بِهِ،
فَإِنْ قَبِلَ مِنْهُ فَذَاكَ، وَإِلَّا كَانَ قَدْ أَدَّى الَّذِي عَلَيْهِ
முஸ்னத் அஹ்மத் 15369, 14909
ஆட்சியாளருக்கு அறிவுரை சொல்ல விரும்பினால்,
அதை வெளிப்படையாகச் செய்யக்கூடாது
அவரை தனியாக சந்தித்து சொல்ல வேண்டும்
அவர் அதை ஏற்றுக்கொண்டால் நல்லது
இல்லையெனில்
அவர் தன் கடமையை நிறைவேற்றியவராகிவிடுவார்
1-இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா
என்பதில் இமாம்களுக்கு இடையில்
சர்ச்சை உள்ளது
சிலர் இதை ஹசன் தரத்திலும்
சிலர் இதை லயீப் தரத்திலும்
குறிப்பிடுகின்றனர்
அவ்வகையில் இந்த ஹதீசை
பலம் பொருந்திய சான்றாக வைத்து
இஸ்லாமிய ஆட்சியாளரை எதிர்க்கக்கூடாது என்று வாதிட முடியாது
2- ஆட்சியாளர் செய்யும் தவறு
இரு வகைப்படும்
ஒன்று அவரது தனிப்பட்ட தவறு
மற்ற ஒன்று ஆட்சிமுறையில் அவர் செய்யும் தவறு
ஆட்சியாளர் செய்யும் தனிப்பட்ட தவறுகளை பகிரங்கமாக கூறாதீர்கள் என்றே இந்த ஹதீசின் கருத்துள்ளதே தவிர
ஆட்சி எனும் அமைப்பில் அவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாதீர்கள் என்பது அல்ல
காரணம் ஆட்சியாளர் செய்யும் தனிப்பட்ட தவறுகளை ஒரு சிலரே பார்க்க முடியும்
அத்தகையவர்கள் அதை பகிரங்கப்படுத்தி ஆட்சியாளர் மானத்தை பறிக்க உறுதுணையாக மாறிவிடக்கூடாது என்பதே அறிவுரை
ஆனால் ஆட்சி முறையில் செய்யும் தவறுகளை குடிமக்கள் அனைவரும் அறிந்தே இருப்பர்
குடிமக்கள் பகிரங்கமாக அறிந்த தவறுகளை கூட பகிரங்கமாக சுட்டிக்காட்டக்கூடாது என்பதற்கு இதில் எந்த சான்றும் இல்லை
சவுதி இளவரசர் சல்மான்
தனிப்பட்டு பேஷன் சோ நடத்தி அதில்
அவர் குடித்து கும்மாளம் அடித்து நடனமாடுவதை நீங்கள் கண்டால் அதை குடிமக்களிடம் பகிரங்கப்படுத்தாது தனிப்பட்டு இளவரசர் சல்மானிடம் உங்களால் இயலுமானால்
அவரது தவறை சுட்டிக்காட்டுங்கள்
அதே சவுதி இளவரசர் சல்மான் இஸ்லாமிய
ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கும் பேஷன் ஷோ
சினிமா தியேட்டர் போன்றவைகளுக்கு பகிரங்கமாக அனுமதி கொடுத்து வரும் இப்பட்சத்தில் அதை உலகமே அறிந்துள்ள நிலையில்
அந்த கேடுகெட்ட அனுமதியை வெளிப்படையாகவே கண்டியுங்கள்
காரணம் இளவரசர் அனுமதித்துள்ள பல விசயங்கள்
இஸ்லாமிய அரசியல் சாசனம் சம்மந்தப்பட்டது
இளவரசர் சல்மான் அனுமதித்த இந்த காரியங்கள் இஸ்லாமிய நாட்டில் பல வழிகேடுகள்
முளைக்க காரணமாக அமையும்
இவ்வாறு எதிர்க்கும் பட்சத்தில் அடுத்து ஆட்சிபீடத்தில் அமரும் இளவரசனுக்கும்
அது பாடமாக அமையும்
உலக அரங்கிலும் இஸ்லாத்தின் கண்ணியம் மேலோங்கும்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
15-4-2026
Comments
Post a Comment