ஏகத்துவ பிரச்சாரத்தின் பயன்கள்
ஏகத்துவ பிரச்சாரத்தால்
முளைத்த சமுதாய பயன்கள்
*******************
கட்டுரை எண் 1570
***************
சமீபத்தில் ஆலீம் பட்டம் பெற்று அழைப்புப்பணியில் ஈடுபடும்
சில இளைய உலமாக்கள்
எதிர் கொள்கையில் பயணிக்கும் ஏகத்துவ சிந்தனை உடையவர்களை இஸ்லாத்தின் எதிரிகளாக விமர்சிக்கும்
அவலத்தை பார்க்க முடிகிறது
இதற்கு அடிப்படைக்காரணம்
அவர்கள் பிறப்பதற்கு முன் தமிழகத்தில் நிலவி வந்த முஸ்லிம்களின் தவறான நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் கண்கூடாக காணவில்லை
மூடநம்பிக்கைகளும்
சிர்க் என்ற பெரும்பாவங்களையே
இஸ்லாமாக கருதி வந்தனர்
வயதானவர்களுக்கே பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது என்ற மனநிலையில்
அநேகர் வாழ்ந்து வந்தனர்
கூத்தாடிகளுக்கு மன்றங்களையும் அரசியல்வாதிகளை விட்டால் முஸ்லிம் சமூகத்தை காப்பாற்ற எவராலும் முடியாது என்ற
தாழ்வு மனப்பான்மையும் தனக்குள்
வளர்த்திக்கொண்டனர்
குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாம்
என்ற அடிப்படை ஞானம் இல்லாதும்
அரபியில் எழுதி வைக்கப்பட்ட பைத்துகளையும் நூறு மசாலா பாடல்களையும்
நாகூர் ஹனீபா பாடல்களையுமே
தூய இஸ்லாமாக கருதி வந்தனர்
இந்நிலையில் இஸ்லாத்திற்கு விரோதமாக செயல்படும் பலர் இஸ்லாத்தை பற்றியும்
நபிகள் நாயகம் (ஸல் )அவர்களைப்பற்றியும் தவறாகவும் வன்மமாகவும் மேடைகளில் துணிச்சலாக விமர்சனம் செய்து வந்தனர்
அதன் காரணமாகவே பழனி பாபா போன்றவர்கள் இளைய சமூகத்தை உணர்ச்சிப்பூர்வமாக மாற்றவேண்டும் என்று அரும்பாடு பட்டனர்
எனினும் பழனிபாபா நினைத்தளவுக்கு
முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வை
ஏற்படுத்த முடியவில்லை
அதனால் பழனிபாபாவே ஒவ்வொரு கூட்டத்திலும் திருந்த மாட்டீர்களா வருந்த மாட்டீர்களா ?
என்று முஸ்லிம் சமூகத்தை நோக்கி விரக்தியுடன் பேசி வந்தார்
பழனிபாபா நினைத்தளவு முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாமல் போனதற்கு மூல காரணம்
போராளி பழனிபாபா அவர்கள்
முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சிப்பூர்வமாக
செதுக்க நினைத்தாரே தவிர மார்க்க ரீதியாக செதுக்குவதற்கு தனது பிரச்சாரத்தில் குர்ஆன் சுன்னாவை அடிப்படையாக அமைக்கவில்லை
சஹீத் பழனிபாபாவும் படித்தவராக
வக்கீலாக சிந்தனைச்சிற்பியாக விளங்கினாரே தவிர மார்க்கத்தை முறையாக படித்த ஆலிமாக இருக்கவில்லை
பழனிபாபா அவர்களின் முயற்சிக்கும் தியாகத்திற்கும் மறுமையில் நிச்சயம் இறைவன் கூலி வழங்குவான் இன்ஷா அல்லாஹ்
இதில் வேதனையான விசயம் என்னவெனில் போராளி பழனிபாபாவுக்கு இருந்த சமூக அக்கரையும் கூட அன்றைய ஜமாஅத்துல் உலமா சபைகளுக்கு இருக்கவில்லை
மக்களின் தவறான நம்பிக்கைக்கு ஏற்று மார்க்கத்தை வலைத்தும் திரித்தும் பேசினார்களே தவிர இஸ்லாமிய மார்க்கத்தின் ஆதாரங்களை முன்னிருத்தி முஸ்லிம் சமூகத்தை
வழி நடத்தி செல்ல முயற்சிக்கவில்லை
மீலாது விழா மேடைகளிலும்
அரசியல்வாதிகளை புகழ்ந்தார்களே தவிர அண்ணல் நபியின் ஆதாரப்பூர்வமான வாழ்வைப்பற்றியும் இஸ்லாமிய தனிச்சிறப்புகளை பற்றியும் ஏகத்துவத்தின் அவசியத்தைப்பற்றியும்
எடுத்துக்கூற முனையவில்லை
இந்நிலையில் இறைவனின் அருளால் தமிழகத்தில் சில மார்க்க அறிஞர்கள் சத்தியத்தையும் ஏகத்துவத்தின்
அவசியத்தையும் மார்க்க ஆதாரங்களுடன் பல எதிர்ப்புகளையும் மீறி துணிவுடன் மக்களுக்கு எடுத்துச்சொல்ல முன் வந்தனர்
அதுவரை கடமையை மறந்து
ஆலிம் பணியை கூலி வேலையாக பார்த்து
வந்த உலமாக்கள்
ஏகத்துவ சிந்தனைக்கருத்துக்கு எதிராக ஜும்மா மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும்
முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சிப்பூர்வமாக தூண்டி விட்டு ஏகத்துவத்தை போதித்த அழைப்பாளர்கள் மீது அவதூறுகளை பரப்ப துவங்கினர்
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அழைப்புப்பணியில் ஈடுபட்ட ஏகத்துவ இமாம்களின் கருத்துக்களையும்
வெறுப்பை தூண்டி பேசி வந்த உலமாக்களின் கருத்துக்களையும் ஒப்பிட்டு பார்க்க இறையருளால் முஸ்லிம் சமூகம்
முயற்சி செய்ய ஆரம்பித்தனர்
தற்போதைய வசதி வாய்ப்பு இல்லாத
அக்கால கட்டத்தில் கேசட்டுகளில் ஆடியோக்கள் மூலமாகவும் இஸ்லாமிய மாதப்பத்திரிக்கை மூலமாகவும் ஏகத்துவ உரைகள் மக்களை
அதி விரைவில் சென்றடைந்தது
ஏகத்துவ சிந்தனையாளர்கள் பேச்சுக்களை
கேட்க சுற்றுலாவுக்கு செல்வது போல் வேன்களிலும் டூவிலர்களிலும் தங்களது நேரத்தை ஒதுக்கி பல மைல் தூரத்தில் ஏற்பாடு செய்யப்படும் ஊர்களுக்கும் பயணம் செய்ய
ஆர்வம் கொண்டனர்
இதன் பயனாக
(1) இஸ்லாம் என்றால் அதன் அடிப்படை குர்ஆன் சுன்னா மட்டுமே என்ற புரிதல் இளைய சமூகத்தில் வேரூன்ற துவங்கியது
(2) தமிழ் குர்ஆனையும் அக்காலத்தில் வெளியிடப்பட்ட சில ஹதீஸ் நூற்களையும் படிக்கவும் பரப்பவும் துவங்கினர்
(3) கூத்தாடிகளை அரசியல்வாதிகளை தலையில் தூக்கி வைத்து திரிந்த இளைய சமூகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத்த தவிர
சிறந்த வழிகாட்டி எவரும் இல்லை என்பதை உணர்ந்து ரசிகர் மன்றங்களில் இருந்து வெளியேற துவங்கினர்
(4) இறையில்லங்களில் வாலிபர்களின்
வருகை அதிகரிக்க துவங்கியது
(5) வீதிகளில் இஸ்லாமிய தெருப்பிரச்சாரம் நடைபெற துவங்கியது
(6) வரதட்சணை இல்லாமல் நபிவழியில்
எளிமை திருமணங்களை நடத்த ஆர்வம் பிறந்தது
(7) அதுவரை பள்ளிவாசலின் பக்கம் அடி எடுத்து வைக்காத பெண்கள் இறையில்லத்தில் இறைவனிடம் கையேந்துவது அவசியம் என்பதையும் இறையடியார்களிடம் கையேந்துவது இணைவைத்தல் என்ற பெரும்பாவம்
என்பதையும் உணரத்துவங்கினர்
( 8 ) ரமழான் மாதத்தின் இஃதிகாப் லைலதுல் கத்ரு என்ற ஒற்றைப்படை இரவுகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற சிந்தனை வழுவாக வளரத்துவங்கியது
( 9 ) இன்று பல சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில்
இந்நிலை ஏற்படவும் ஏகத்துவ சிந்தனையின் வளர்ச்சியே மூல காரணமாக அமைந்தது
( 10 ) புருடாக்களை கப்சாக்களை ஜும்மா மேடையில் பேசி வந்த மாற்றுக்கொள்கையுடைய பல உலமாக்கள் குர்ஆன் ஹதீசை பேசுவதின் மூலமாகவே மக்கள் மதிப்பார்கள் என்பதை உணர்ந்து ஓரளவுக்கு மார்க்கத்தை
பேச ஆரம்பித்தனர்
( 11 ) முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாகவும் ஏமாற்ற முடியாது என்பதை அரசியல்வாதிகளும் உணரத்துவங்கினர்
( 12 ) இந்து முன்னனி போன்ற
காவி அமைப்புகளால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் தவறாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாமிய கருத்துக்களையும் தவறான எண்ணங்களையும்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் துவங்கிய நிகழ்சிகளே
இன்று வரை மாற்றார்களின் உள்ளத்தில் இருக்கும் வெறுப்புணர்வை கலைந்திட
அடித்தளமாக அமைந்தது
இவையாவும் 1994 முதல்
நான் கண்ட ஏகத்துவ பிரச்சாரத்தின் மூலம் பெற்ற அனுபவப்பாடங்களில் சில
மனிதன் என்ற முறையில் அனைத்து அமைப்புகள் மற்றும் தலைவர்களிடமும் சில தவறான அணுகுமுறைகளும் நடைமுறைகளும் இருக்கலாம்
அவைகளை முன்னிலைப்படுத்தி
ஏகத்துவ சிந்தனையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எவராலும்
மறுக்க இயலாது
ஏகத்துவம் வந்த பிறகே
சமூகம் பிளவுபட்டது
பல பிரிவுகள் உருவானது
புதிய புதிய ஹதீஸ்கள் வந்தது
என்று வழமை போல் புலம்பிக்கொண்டிருக்காது
மக்களை திசை திருப்பாது
இது போன்ற அழகிய மாற்றம் ஏற்பட
கடந்த காலங்களில்
நாம் என்ன பங்களித்தோம் ?
இப்போது எந்த பணியை மேற்கொண்டுள்ளோம் என்பதை சிந்திப்பதே அவசியமானது
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
நிச்சயமாக இஸ்லாமே அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர் எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ
நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கை துரிதமாக முடிப்பான்
(அல்குர்ஆன் : 3:19)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
29-3-2026
Comments
Post a Comment