கருத்துவேறுபாடுகளும் சிந்தனைக்கு உரம்

           கருத்து வேறுபாடுகளும்
              சிந்தனைக்கு உரமே
                     ***************
                கட்டுரை எண் 1506
                     ***************

மனிதனின் சிந்தனையும் இறைவன் வழங்கியுள்ள திறனும் நபருக்கு நபர் மாறுபட்டு இருக்கும் வரை 
எந்த விசயத்திலும் மாற்றுக்கருத்துக்கள் நிகழும் என்பதில் சந்தேகம் இல்லை

மாற்றுக்கருத்துக்களே நிகழக்கூடாது என்று கருதுவோரும் எதிர்ப்பார்போரும் கற்பனை உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை

எந்த மாற்றுக்கருத்துக்கும் ஒரு தீர்வு நிச்சயம்  அமைந்திருக்கும் 

அந்த தீர்வை நோக்கி நகருதலும் மக்களுக்கு நாகரீகமாக அந்த தீர்வை  புரிய வைப்பதும் தவறில்லை 


ஆனால் மாற்றுக்கருத்துடையவர் என்பதால் எவரையும் வெறுப்பு கண்ணாடி அணிந்து முஸ்லிம்கள் பார்க்க கூடாது 
இது போன்ற சூழல்களில் தான் ஷைத்தான் பல ரூபங்களில் மனிதனின் உள்ளத்தில் நுழைய முற்படுவான் 


குறிப்பாக மார்க்க விவகாரங்களில் மாற்றுக்கருத்து என்பது சஹாபாக்கள் முதல் கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த  ஹதீஸ்கலை வல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இமாம்கள் வரை ஏற்பட்டிருந்தது தற்போது இருக்கும்  அறிஞர்களிடமும் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் ஏற்பட்டே தீரும்


இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில் சஹாபாக்கள் வாழ்ந்த காரணத்தால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து  வேறுபாடுகள் விரைவாக தீர்வை நோக்கி பயணித்தது

தற்போது அச்சூழல் இல்லாத காரணத்தால் இஸ்லாமிய வரலாறுகளில் பதிவாக்கப்பட்ட பலதரப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி பிறகே அவைகளை குர்ஆன் சுன்னாவுடன் ஒப்பிட்டு
 ஒரு முஸ்லிம்  முடிவின் பக்கம் வர இயலும் 


இதை திருக்குர்ஆன் தெளிவாக சொல்கிறது  

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا‏

உன் இறைவன் மேல் சத்தியமாக அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்று
பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும்  மனங்களில் கொள்ளாது 
(அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் 
அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்

(அல்குர்ஆன் : 4:65)



وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖ‌ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏

அல்லாஹ் நாடியிருந்தால்
நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக சமுதாயமாக ஆக்கியிருப்பான்
எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய கிருபையில் நுழைவிப்பான் அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ உதவிபுரிபவர்களோ இல்லை

(அல்குர்ஆன் : 42:8)



ஆய்வின் அடிப்படையில் ஒரு விசயத்தில் தவறான முடிவின் பக்கம் சென்றாலும் அம்முயற்சிக்கும் நன்மை
உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதும் மனிதனின் அறிவு சுதந்திரத்திற்கு இஸ்லாம் வழங்கிய கண்ணியமாகும்

திருமறைக்குர்ஆனின் வசனங்களை கூட குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மனிதனின் சிந்தனைக்கு அல்லாஹ் சிறப்பை வழங்கியுள்ளான் 

وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا‏

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் செவிடர்களையும் குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள் (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள் )

(அல்குர்ஆன் : 25:73)




குர்ஆன் சுன்னாவை ஏற்றுக்கொண்டவர்களே கருத்து வேறுபாடுகளால் சிதைந்து கிடக்கின்றனர் என்று எவரும் கவலை கொள்ளத்தேவை இல்லை 



காரணம் குர்ஆன் சுன்னாவை ஏற்றுக்கொண்டவர்களால் மட்டுமே எதையும் மூளையை அடகு வைக்காது சிந்திக்க முடியும் ஏற்றுக்கொள்ளவும் முன் வர இயலும்


குறிப்பாக மார்க்க ஞானம் இல்லாதவர்கள் 
அல்லது ஒரு விசயத்தில் தெளிவு பெறாதவர்கள் மார்க்க அறிஞர்களே முரண்பட்டு இருக்கும்  எந்த சர்ச்சையிலும்  தலையிடாது இருப்பதே அவர்களின் ஈமானுக்கு பாதுகாப்பாகும் 

காரணம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவர் 
அவர் அறிந்தவைகளை வாழ்வில் செயல்படுத்துவது கடமையே தவிர 
கருத்து வேறுபாடு கொண்ட விசயங்களில்  தலையிட்டு மக்களுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்பது பாமர மக்கள் மீது சுமத்தப்பட்ட  கடமை இல்லை 

அறியாதவைகளை அறியவில்லை என்று ஒப்புக்கொள்வதும் கூட 
சீரிய சிந்தனையுடையவரின் நற்குணமாகும் 


      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                               6-2-2025

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை