உனக்கு நீ செய்யும் நல்லறம்

      உனக்கு நீ செய்யும் நல்லறம்
                ******************* 
                 கட்டுரை எண் 1504
                         ************


கடந்த காலத்தை சில பொழுது தனிமையில்  எண்ணிப்பாருங்கள் 
ஏதோ ஒன்றை அடைவதற்கும்
பெறுவதற்கும் அதிகமாக அப்போது 
நீங்கள் கடுமையாக  முயற்சி செய்திருப்பீர்கள் 

அந்நேரம் அதைத்தவிர வேறெதுவும் உங்கள் வாழ்வில் இனிமையாகவும் பாக்கியமாகவும் ஆழ்மனதில் 
நிச்சயம் இடம்பெற்றிருக்காது


அதை அடைவதற்கு எதையும் இழக்கலாம் என்றும் அதற்காக எந்த சிரமத்தையும் எதிர் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து அதன் மூலம் ஏற்பட்ட
 சில உளைச்சல்களையும்  தொடர்ந்து  சந்தித்திருப்பீர்கள் 
தனிமையில் கண்ணீர் வடித்திருப்பீர்கள் சோகப்பாடல்களை உங்கள் வாழ்க்கை பாடல்களை போல் கருதி  கற்பனையில் கேட்டு  வலம்  வந்திருப்பீர்கள்

ஆனால் தற்போது கடந்த காலத்தின் தேடல்கள் உங்களிடம் நிச்சயம்  குறைந்திருக்கும் 
அல்லது  குன்றிப்போயிறுக்கும் 

இதற்காகவா அந்நேரத்தில் கடுமையாக 
நான்  முயற்சி செய்து கொண்டிருந்தேன்  என்று 
சில பொழுது உன்  மனமே உன்னிடம் எதிராக பேசியிருக்கும் எள்ளி நகையாடியிருக்கும்


ஆண் பெண் யாராகிலும் 
இதுவே மனிதனின் மனநிலை 


இம்மனநிலையை சரியான கோணத்தில் அறியும் மனிதன் இனி எதற்காகவும் தன்னை புதிதாக வருத்திக்கொள்ள மாட்டான் 
இனி எதற்காகவும் வீண் செலவுகளை செய்யத்துணியவும் மாட்டான் 
இனி எதை தேடியும் மனதை அலைபாய விடமாட்டான் 


ஒவ்வொரு காலத்திலும் மனிதனின் வயதும் இருப்பிடமும் மாறுவதற்கு ஏற்றே 
புதிய தேடல்களையும்  ஓட்டங்களையும் மனம்  தாவிப்பிடிக்கும்

திருமணம் குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் நுழைந்து விட்ட பிறகு கடந்த காலத்தின்  பல ஆசைகளும் தேடல்களும் கானல் நீர் போன்று எளிதாக மாற்றப்பட்டு விடும் 


சில பருவத்தில் சினிமா மோகத்தில் சுற்றியிருப்பாய்  காலை முதல் உறங்கச்செல்லும் வரை சினிமா செய்திகளையே தலைப்பு செய்தியாக அப்போது  நீ படித்திருப்பாய்
ஆனால் இன்று அந்த நடவடிக்கைகளை  அறிவீனமாக உன்  மனசாட்சியே பாடம் கற்பித்து தந்திருக்கும் 

சில பருவத்தில் இனக்கவர்ச்சியில் சுற்றியிருப்பாய் அதற்காக உன் குடும்பத்தையும் கண்ணியத்தையும் பொன்னான நேரத்தையும் லட்சியத்தையும்  கருத்தில் கொள்ளாது ஆனந்தமாக அலைந்திருப்பாய் 
ஆனால்  தற்போது அந்த நடவடிக்கைகளை  மனித உடலின்  பலவீனமாக மட்டுமே மனசாட்சி உனக்கு பாடம் கற்பித்து தந்திருக்கும்  

இது போன்ற நிலையே 
மனிதனின் மரணம் வரை பரிணாமம் அடைந்து கொண்டே இருக்கும் 

மனதையும் மனதை சீரழிக்கும்  சூழல்களையும் மாற்றிவிட்டால் 
உலக வாழ்வில்  எதுவும் எளிதாக கடந்து விடும் 


ஆனால் மனதை அறிவுடன் இழுத்துச்செல்வதே வாழ்வில் உனக்கு  சிரமமான காரியமாகும்

தடுமாறிய பின் நிமிர்ந்து எழ முயற்சி செய்வதை விட தடுமாறும் முன்பே விழிப்புணர்வை பெறுவதே 
ஒரு மனிதன் தனக்கு செய்யும் நல்லறம் 

அந்த விழிப்புணர்வை கற்பனைகள் கற்றுத்தராது மாறாக அனுபவங்களும் அனுபவித்தோர் கூறும் அறவுரைகளும் எச்சரிக்கைகளுமே ஓரளவுக்கு வாழ்வில்  கற்றுத்தரும் 



இப்பதிவும் எனது  அனுபவ வார்த்தைகளே
நீங்களும் வாழ்வில்  அனுபவித்து கொண்டிருக்கும் நிதர்சன வார்த்தைகளாகவே இருக்கும் என 
மனதார நம்புகிறேன் 

மனிதனின் மனம் பற்றிய தெளிவை பிற மனிதன் கற்றுத்தருவதை விட மனிதனை படைத்த இறைவன் கற்று தந்திருப்பதே இறைநம்பிக்கையாளன் விழிப்புணர்வு பெறுவதற்கு தகுதியான வாழ்க்கை புத்தகம் 


اِنَّ فِىْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ‏

எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக 
இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது

(அல்குர்ஆன் : 50:37)



       நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                            4-1-2025


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை