வார்த்தை அறிவுரைகள்
வார்த்தைகளால் வடித்த அறிவுரை
***********************
ஐய்யோ என கதறாதே
வாழ்வை நினைத்து பதறாதே
தன்னிலை மறந்து சிதறாதே
தூக்கம் இழந்து உருகாதே
வழிகளை தேடு
வலிகளை எதிர் கொண்டு ஓடு
லட்சியத்தின் ஏணிகளை நாடு
சாதித்தவர்களின் சரிதையை பாடு
உழைப்பை விதையாக்கு
தன்னம்பிக்கையை உரமாக்கு
ரத்தமின்றி யுத்தம் இல்லை
சப்தமின்றி ஓசை இல்லை
ஞானமின்றி வெற்றி இல்லை
முயற்சியின்றி தோல்வி இல்லை
தோல்விக்கும் நீண்ட வாழ்வு இல்லை
கவலையின் கண்களை குருடாக்கு
துக்கத்தின் கால்களை முடமாக்கு
இறைநம்பிக்கையை தனதாக்கு
இஸ்லாமிய போதனைகளை
அதற்கு மூலமாக்கு
கடந்த நிமிடங்கள் உனக்கானது அல்ல
நிகழும் நிமிடங்கள் பிறருக்கானதும் அல்ல
மடிந்தவைகளை நினைத்தே வருந்தாதே
மலரும் விடியலை கைவசம்
தழுவ மறவாதே
இதயத்தில் உன் இறைவன்
இருக்கும் வரை
இமயத்தை எதிர் நோக்கி
நீ பயணித்தாலும்
உன் மகுடத்தை எவரும்
வீழ்த்த இயலாது
பிரார்த்தனையே உன் பலம்
அதுவே உன் வாழ்வின் வளம்
وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى
நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்)
அவனுக்கு காண்பிக்கப்படும்
(அல்குர்ஆன் : 53:40)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
22-11-2024
Comments
Post a Comment